news

Wednesday, May 30, 2012

வந்தேறு குடிகளான தமிழர் வடக்குக்கு உரிமை கோர முடியாது: எல்லாவெல மேதானந்த தேரர்

]
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும்.
இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு அவர்களுக்கு எந்த சான்றோ அல்லது ஆதரவுக் காரணமோ கிடையாது.
நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் வேலகந்த சாஸ்திரி தனது நூலில், தமிழர்கள் ஏனைய இடங்களில் இருந்தே தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதைபடிமங்கள், தென்னிந்தியாவின் புதைபடிமங்களை விடவும் தொன்மையானது என்று அவர் தனது நூலில் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்? வடக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது.
நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கல்வெட்டு தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களம் இந்தக் கல்வெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும். பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது.
அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகம் சிங்களவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வடக்கைத் தமிழர்கள் தமது தாயகம் என்று எப்படி உரிமை கோரமுடியும்?
துணுக்காய் கல்வெட்டில் அனுராதபுர ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறபட்டுள்ளது. பொல்கந்துகம என்ற கிராமத்துக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை அதிகாரிகள் திருகோணமலை கல்லம்பற்றுக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், அங்கு பிக்குணி ஆச்சிரமத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியது குறித்தும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள்,இலங்கையில் எந்தப் பகுதியுமே தமிழர்கள் தமது தாயகம் என்று உரிமை கோர முடியாது என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment