news

Monday, May 14, 2012

லண்டன் வரவுள்ள மகிந்த ராஜபக்சவை விரட்டத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள்!


இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும் ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
இதன் முதற் கட்டமாக மகிந்தவின் லண்டன் விஜயத்தை தடுத்து நிறுத்தக்கோரும் தபால் அட்டைகளை பிரித்தானிய மகாராணிக்கு அனுப்பும் போராட்டத்தினை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். இதனை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி மகிந்த லண்டன் வரும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த போது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அத்துடன் இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த, அவரது பாதுகாப்புப் பிரிவு கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர்க்குற்ற வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை ஜனாதிபதியின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் நீக்கம் செய்திருந்தது.
அத்தோடு பிரித்தானியாவில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் முன்பாகவும் திடீரென நடாத்திய முற்றுகைப் போராட்டத்தால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச மாற்று வழியூடாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
அதனையும் எப்படியோ அறிந்த தமிழ் மக்கள் அங்கும் சென்று முற்றுகைப் போராட்டம் நடாத்தியதால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச நிலைமைகள் சிக்கலடைந்ததால் உடனடியாகவே பிரித்தானிய காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்போடு வெளியேறி அன்று இரவே கொழும்பு சென்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment