news

Sunday, May 27, 2012

வெள்ளைவானில் இளம்பெண் ஒருவர் கடத்தல்: யாழில் இன்று காலை சம்பவம்


யாழ். கோண்டாவில் கிழக்கு கலாசார வீதியில் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த யுவதி ஒருவர், வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா அர்ச்சனா அம்பிகா (23) எனும் இந்த யுவதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வானில் வந்தவர்கள் தந்தையை மோட்டார் சைக்கிளில் இருந்து தள்ளியுள்ளனர்.
அதன் பின் குறித்த யுவதியை வானில் இழுத்துச் சென்றதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
வெள்ளை வாகனத்தில் வந்த சிலரால் திருநெல்வேலி பகுதியில் யுவதியொருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண், தனது தந்தையாருடன் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு சென்ற போது வழி மறித்த கடத்தல் காரர்கள், பெண்ணின் தந்தையாரை கடுமையாக தாக்கிவிட்டு பெண்ணை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த பெண், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணுக்கும் ஆணொருவருக்கும் திருமணத்தில் ஏற்பட்டிருந்த பிணக்கே கடத்தலுக்கு காரணமாக அமைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணும் தந்தையாரும் பயணித்த வாகனம் நீண்டநேரம் அதே பகுதியில் கிடந்துள்ளது. இதேபோன்று கடத்தலின்போது பெண் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். எனினும் அதற்குள் வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
தற்போது சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment