news

Friday, June 8, 2012

இலங்கைக்கு எந்த அவசர நிலையிலும் உதவ சீன இராணுவம் தயார்


 இலங்கைக்கு எந்தவொரு அவசர நிலையிலும் இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி ஆறு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை பெய்ஜிங்கை சென்றடைந்தார்.
அவரை நேற்று சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ உறுதியளித்துள்ளார்.
பேரழிவு அல்லது ஏனைய எந்த அவசரநிலையிலும் சீன இராணுவத்தின் உதவியை இலங்கை கோரலாம் என்றும் எந்தநேரத்திலும் இலங்கைக்கு உதவ தமது இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இராணுவத் தளபதி ஒருவர் சீன பாதுகாப்பு அமைச்சரைத் தனியாகச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தச் சந்திப்பில் சீன இராணுவத் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியன் உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, சீனாவின் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியனுடன் நடத்திய தனியான சந்திப்பின்போது, சீன இராணுவத்துக்கு போருக்கு பிந்திய விடயங்கள் குறித்து பயற்சியளிக்கத் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
சீனா சரியான நேரத்தில் வழங்கிய இராணுவ உதவிகளும் பயிற்சியும் இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியுடன் 11வது டிவிசன் தளபதி பிரிகேடியர் குணவர்த்தன, இராணுவ அகடமியின் தளபதி பிரிகேடியர் ஜெயசுந்தர உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் சீனா சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment